பிரபல ஐ.டி.நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அபிதாலி நீமூச்வாலா, தனது பதவிகளில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி முழுநேர இயக்குநராக பொறுப்பேற்றார். அதே நேரம், அபுதாலி நீமுச்வாலா இந்த நிறுவனத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.
நீமுச்வாலா விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது சுமார் 13% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ, நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 35.1% அதிகரித்து 2,552.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக நீமுச்வாலா பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், அதே சமயம் புதிய நபர் பொறுப்பேற்கும் வரை அவர் இந்தப் பதவிகளில் தொடர்வார் என்றும் விப்ரோ விளக்கம் அளித்துள்ளது.